Monday, October 04, 2004

மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்?

கேள்வி:
நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காத நீங்கள், உங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்?

பதில்:
என்னத்தான் படித்தாலும் வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதை அனுபவ பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர். இதன் காரணமாகவே படிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதில்லை. உயர்கல்வி கற்பதற்கு இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு இல்லாததால் பணம் கொடுத்துத்தான் இடம் பிடிக்கும் நிலை உள்ளது. இது போன்ற காரணங்களால் தான் முஸ்லிம்கள் நவீன கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த நிலையும் சமீபகாலமாக மாறி வருவதைத் காண்கிறோம்.

வெள்ளையர்களை வெறுக்கிறோம் என்ற பெயரில் தேச பக்தி முற்றிப் போய் ஆங்கிலக் கல்வி படிக்கக்கூடாது என்று முஸ்லிம் அறிஞர்கள் அன்று அறிவுரை கூறினார்கள். அதை ஏற்று முஸ்லிம்கள் படிப்பை நிறுத்தினார்கள். காயிதே மில்லத் போன்றவர்களே படிப்பை பாதியில் விட்டனர். வெள்ளையர் காலத்தில் இட ஒதுக்கீடு இருந்தும் தேசப்பற்றின் காரணமாக முஸ்லிம்கள் கல்வியைப் புறக்கணித்தனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் அளித்து வந்த இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.

இன்றைய முஸ்லிம்களின் முன்னோர்கள் தேசப்பற்றின் காரணமாக் கல்வியைக் கற்காததால் அதன் முக்கியத்துவம் தெரியாத சமுதாயமாக இன்றைய முஸ்லிம்கள் உள்ளனர்.