கேள்வி:
அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிறபோது, இறைவனை அவன் என்று முஸ்லீம்கள் குறிப்பிடுவது ஏன்?
பதில்:
இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்கவழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொண்டால் தான் மற்றவர்களுக்க விளக்கமுடியும். இது சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ளவேண்டிய விஷயமாகும். அவன் என்பதற்கு அரபு மொழியில் ஹுவ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். அவர்கள் என்பதற்கு ஹும் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள் ஒருவனைக் குறிப்பது என்றால் ஹுவ என்றும் பலரைக் குறிப்பது என்றால் ஹும் என்றும் கூறுவார்கள் மாதியாதைக்காக ஒருவனைக் குறிக்கும் போது (ஹும்) அவர்கள் என்று அரபியில் கூறவேமாட்டார்கள்.
அல்லாஹ், தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹுவ என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான் மரியாதைக்காக ஹும் (அவர்கள்) என்று அவன் பயன்படுத்தவில்லை. அது போலவே இப்லீஸ் பிர்அவ்ன் போன்ற கொடியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது ஹுவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹுவ என்று தான் கூறவேண்டும் மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.
ஹுவ (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப் பற்றிக் கூறப்படவில்லை ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர அவர் மரியாதைக்குரியவரா இல்லையா என்பதை இவவார்த்தையிலிருந்து புரிந்துக் கொள்ளமாட்டார்கள். இதே போல் ஆங்கிலத்தில் He என்ற வார்த்தை ஒருவரை குறிப்பிட பயன்படுத்தப்படுகின்றது. They (அவர்கள்) என்பது பலரை குறிப்பிடவே பயன்படுத்தப்படுகின்றது மரியாதைக்காக ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது They என்று குறிப்பிடுவதில்லை.
இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும் அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது. ஒரு நபரைக் குறிப்பிடுவதற்குப் பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமாக மாறிவிட்டது. ஒருவரைக் குறிப்பிட அவர் என்ற பன்மைச் சொல்லைப் பயன்படுத்தலானார்கள். அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்றனர். மரியாதை கொடுக்கப்படாதவரை குறிப்பிடும்போது அவன் எனவும் மரியாதை கொடுக்கப்பட்ட வேண்டிய வரை குறிப்பிடும் போது அவர் எனவும் அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் மாற்றிக் கொண்டனர்.
தமிழில் "மரியாதைப் பன்மை" வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் தமிழில் அவன் என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர். வள்ளுவன் சொன்னான், கம்பன் கூறகிறான், ராமன் வில்லை ஒடித்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதே போலவே கடவுளைக் குறிக்கும் போதும் அவன் நீ என்று தான் குறிப்பிடப்பட்டது மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வருவதற்கு முன்பே கடவுள் அவன் என்று இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டதால் அதுவே தொடர்ந்து வருகிறது.
கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கூற மாட்டோம். கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம். இதற்க்கு காரணம் கருணாநிதி மரியாதைப்பன்மை வழக்கமாகி விட்ட காலத்தில் வாழ்கிறார் கம்பன் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராதக் காலத்தில் வாழ்ந்தார்.
அல்லாஹ்வை அவன் என்று கூறுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்த சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம். எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போது கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம்தான். அவன் என்று கூறுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் அவர் என்பதும் அவர்கள் என்பதும் பலரைக் குறிக்கின்ற சொல்லாகும். அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும் வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி விட்டால் எதிர்காலத்தில் நிறைய அல்லாஹ்கள் இருந்திருப்பார்களோ என்று நினைத்து விடலாம் அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும். ஒருவன் என்று கூறுவதுதான் முக்கியமானது என்பதால் அவன் என்று கூறுவதை தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.
அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது. மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் அவன் எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.